Featured Post

Sharing our 2.5 years of experience in Life Natural

தமிழில் We have been practicing Life Natural for more than two and a half years now. I have been thinking to write a post for the past ...

Wednesday, January 28, 2015

கேழ்வரகு பூரணக் கொழுக்கட்டை (மோதகம்)

கேழ்வரகு பூரணக் கொழுக்கட்டை (மோதகம்)
கேழ்வரகு பூரணக் கொழுக்கட்டை (மோதகம்)
தேவையான பொருட்கள்:
பூரணம் தயார் செய்ய:
  1. கடலைப் பருப்பு – 1/2 குவளை
  2. வெல்லம் – 1/2 குவளை
  3. ஏலக்காய் தூள் – 1/4 தேக்கரண்டி
கொழுக்கட்டை மாவு தயார் செய்ய:
  1. கேழ்வரகு மாவு – 1 குவளை
  2. நீர் – 1 குவளை
  3. இந்துப்பு – 1 சிட்டிகை

பூரணம் செய்முறை:
  1. கடலைப் பருப்பை 2 மணி நேரம் முன்னதாக ஊற வைத்துக் கொள்ளவும். அதனைக் கழுவி குக்கரில் போட்டு 1/2 குவளை தண்ணீர் ஊற்றி வேகவிடவும். முதல் விசில் வந்ததும் தீயைக் குறைத்து 4 அல்லது 5 நிமிடங்கள் வரை அடுப்பில் வைத்திருந்தால் சரியாக இருக்கும்.
  2. பருப்பு ஆறிய பின்னர் மிக்ஸியில் (நீர் இல்லாமல்) போட்டு பொடித்துக் கொள்ளவும். அதனை ஒரு பாத்திரத்திற்கு மாற்றவும்.
  3. அதனுடன் மண்டை வெல்லத்தைப் பொடித்துக் கலக்கவும். வெல்லம் சற்று கட்டியாக இருந்தால் அதனையும் ஒருமுறை மிக்ஸியில் இட்டு பொடித்த பின்பு கடலைப் பருப்புடன் கலக்கவும்.
  4. இறுதியில் ஏலக்காய் தூள் சேர்த்து, கலவையை நன்றாக கிளறி விடவும். இப்பொழுது பூரணம் தயார்.
கொழுக்கட்டை மாவு செய்முறை:

  1. ஒரு அடி கனமான பாத்திரத்தில், கேழ்வரகு மாவை இட்டு, மாவு சற்று சூடாகும் வரை கரண்டியால் கிளறி விடவும். இதற்கு 3 அல்லது 4 நிமிடங்கள் போதுமானது. பின்னர் மாவை ஆற வைக்கவும். அதில் இந்துப்பை கலக்கவும்.
  2. மற்றொரு பாத்திரத்தில் 1 குவளை தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விடவும். சுடுநீரை கேழ்வரகு மாவில் சிறிது சிறிதாக ஊற்றி, கரண்டியால் கிளறிக் கொண்டே இருக்கவும். மாவு கையால் தொடும் சூட்டில் இருந்தால் அப்படியே நன்றாக சப்பாத்தி மாவு போல் உருட்டிப் பிசைந்து கொள்ளவும். கொழுக்கட்டை பிடிக்கும் வரை, மாவை மூடி வைக்கவும்.
கொழுக்கட்டை பிடிக்கும் முறை:

  1. கேழ்வரகு மாவை சிறிய எலுமிச்சம்பழம் அளவு பிட்டு உள்ளங்கைகளில் வைத்து நன்றாக உருட்டிக் கொள்ளவும். பின்னர் அதனை இரு கை விரல்களாலும் மென்மையாக அழுத்தி அழுத்தி ஒரு கிண்ணம் போல் செய்து கொள்ளவும்.
  2. அதன் நடுவில் கடலைப் பருப்பு பூரணத்தை ஒரு சிறிய பந்து போல் உருட்டி வைக்கவும். இப்போது கிண்ண வடிவில் பூரணத்தை சுற்றியிருக்கும் மாவை அப்படியே குவித்து, பூரணத்தை நன்றாக மூடவும். 
  3. இதேபோன்று மீதமிருக்கும் கேழ்வரகு மாவு முழுவதையும் மோதக வடிவில் பிடிக்கவும். இவற்றை
  4. இட்லி பாத்திரத்தில் வைத்து 30 நிமிடங்கள் ஆவியில் வேகவைக்கவும். சூடாக பரிமாறவும்.
குறிப்பு:

  • இந்த செய்முறையை, நான் ஈஷா காட்டுப்பூ டிசம்பர் இதழிலிருந்து கற்றுக் கொண்டேன்.
  • கொழுக்கட்டை மாவு தயார் செய்யும் பொழுதும், பூரணம் செய்யும் பொழுதும், உபயோகிக்கப்படும் தண்ணீரின் அளவு சரியாக இருக்க வேண்டும். இல்லையெனில் கொழுக்கட்டை வடிவம் சரியாக பிடிக்க முடியாது.
  • மாவு விரைவில் காய்ந்து விடும். எனவே முதலில் பூரணத்தை தயார் செய்த பின்னர், மாவைப் பிசையவும். ஒருவேளை, மோதக அச்சு பிடிக்கும் போது மாவு சற்று காய்ந்து இருப்பது போல் தெரிந்தால், விரலால் தண்ணீரை லேசாக நனைத்துக் கொள்ளவும்.

No comments :

Post a Comment